Menu

சங்கீதம் 102

TCV

1 யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; உதவிக்காக என் கதறுதல் உம்மிடம் வந்துசேர்வதாக. 2 நான் துன்பத்தில் இருக்கும்போது உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; நான் கூப்பிடும்போது உமது செவியை என் பக்கமாய்த் திருப்பி, விரைவாய் எனக்குப் பதிலளியும். 3 என் நாட்கள் புகையைப்போல் மறைந்துபோகின்றன; என் எலும்புகள் தகதகக்கும் தணல்கள்போல் எரிகின்றன. 4 என் இருதயம் புல்லைப்போல் உலர்ந்து கருகிப்போயிற்று; நான் என் உணவைச் சாப்பிடவும் மறக்கிறேன். 5 என் உரத்த பெருமூச்சினால் நான் எலும்பும் தோலுமானேன்; 6 நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்; பாழிடங்களில் உள்ள ஓர் ஆந்தையைப்போல் இருக்கிறேன். 7 நான் நித்திரையின்றிப் படுத்திருக்கிறேன்; நான் வீட்டுக்கூரைமேல் தனித்திருக்கும் ஒரு பறவைபோல் ஆனேன். 8 என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்; எனக்கு விரோதமாக வசை கூறுகிறவர்கள் என் பெயரைச் சாபமாகப் பயன்படுத்துகிறார்கள். 9 நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு, என் பானத்தைக் கண்ணீரோடு கலக்கிறேன். 10 உமது கடுங்கோபத்திற்கு உள்ளானேன். நீர் என்னை தூக்கி, ஒரு பக்கமாய் வைத்துவிட்டீர். 11 என் வாழ்நாட்கள் மாலைநேர நிழலைப் போன்றது; நான் புல்லைப்போல் வாடிப் போகின்றேன். 12 ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்; உமது கீர்த்தி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும். 13 நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்; இதுவே நீர் அதற்கு தயை காட்டும் காலம், நியமிக்கப்பட்ட காலமும் வந்துவிட்டது. 14 சீயோனின் கற்கள் உமது பணியாளர்களுக்கு அருமையாய் இருக்கின்றன; அதின் தூசியின்மேலும் அவர்கள் அனுதாபம் கொள்கிறார்கள். 15 நாடுகள் யெகோவாவினுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்; பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது மகிமைக்கு மரியாதை செலுத்துவார்கள். 16 யெகோவா திரும்பவும் சீயோனைக் கட்டியெழுப்பி, தம் மகிமையில் காட்சியளிப்பார். 17 ஆதரவற்றவர்களின் மன்றாட்டிற்கு அவர் பதிலளிப்பார்; அவர்களுடைய வேண்டுதல்களை அவர் புறக்கணிக்கமாட்டார். 18 இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி, இனிவரப்போகும் தலைமுறையினருக்காக இது எழுதப்படுவதாக: 19 “யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்; அவர் பரலோகத்திலிருந்து பூமியை நோக்கி, 20 அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும், மரணத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களை விடுதலையாக்கவுமே பார்க்கிறார்." 21 ஆகையால் மக்களும் அரசுகளும் யெகோவாவை வழிபடுவதற்கு கூடிவரும்போது, 22 சீயோனில் யெகோவாவினுடைய பெயரும் எருசலேமில் அவருடைய துதியும் அறிவிக்கப்படும். 23 யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்; என் நாட்களையும் குறுகச்செய்தார். 24 அப்பொழுது நான் அவரிடம் உரைத்தது, “இறைவனே, என் வாழ்நாட்களின் இடையிலேயே என்னை எடுத்துக் கொள்ளாதிரும்; உமது வருடங்கள் எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கின்றனவே. 25 நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; வானங்களும் உமது கரங்களின் வேலையாய் இருக்கின்றன. 26 அவை அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்; உடையைப்போல் நீர் அவைகளை மாற்றுவீர்; அவைகளெல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும். 27 நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர், உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை. 28 உமது அடியாரின் பிள்ளைகள் உமது சமுதாயத்தில் குடியிருப்பார்கள்; அவர்களுடைய சந்ததியும் உமக்கு முன்பாக நிலைகொண்டிருக்கும்."

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate