Menu

எபிரெயர் 13

TCV

1 ஒருவரிலொருவர், சகோதர அன்பில் தொடர்ந்து நிலைத்திருங்கள். 2 அந்நியரை உபசரிக்க மறந்துவிடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததினால், சிலர் அறியாமல் இறைத்தூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள். 3 சிறையில் இருப்பவர்களை, நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோலவும், துன்பப்படுகிறவர்களை, நீங்களும் அவர்களோடு துன்பப்படுவதைப்போலவும் எண்ணிக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 4 திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப்படுக்கை தூய்மையாக காக்கப்படவேண்டும். விபசாரத்திலும், முறைகேடான பாலுறவிலும் ஈடுபடுகிறவர்களை இறைவன் நியாயந்தீர்ப்பார். 5 பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன், “நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன்; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்று சொல்லியிருக்கிறாரே. 6 எனவே நாமும் மனத்தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று சொல்வோம். 7 உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுத்த தலைவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையின் பிரதிபலனை யோசித்துப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தையே நீங்களும் பின்பற்றுங்கள். 8 இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். 9 பல்வேறுபட்ட விசித்திரமான போதனைகளினால், வழிவிலகிப் போகாதிருங்கள். எந்த பயனும் இல்லாத சடங்குமுறை உணவு வகைகளினால் அல்ல கிருபையினால் நம்முடைய இருதயம் பெலப்படுவதே நல்லது. 10 இறைசமுகக் கூடாரத்தில் பணிபுரிகிறவர்கள் அதிலிருந்து சாப்பிட அதிகாரமில்லாத ஒரு பலிபீடம் நமக்கு உண்டு. 11 பிரதான ஆசாரியன் மிருகங்களின் இரத்தத்தை, மகா பரிசுத்த இடத்திற்கு பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுபோகிறான். ஆனால் மிருகங்களின் உடல்களோ முகாமுக்கு வெளியே எரிக்கப்படுகின்றன. 12 இவ்விதமே இயேசுவும்கூட, நகர வாசலுக்கு வெளியே வேதனைகளை அனுபவித்து, தமது சொந்த இரத்தத்தின் மூலமாக மக்களைப் பரிசுத்தமாக்கினார். 13 ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து, முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம். 14 ஏனெனில், நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப்போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். 15 ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை அறிக்கையிடுகிற உதடுகளின் கனியை, துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக. 16 நன்மைசெய்ய மறக்கவேண்டாம், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடவேண்டாம். இப்படியான பலிகளிலேயே இறைவன் பிரியப்படுகிறார். 17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுடைய அதிகாரத்திற்கு பணிந்து நடவுங்கள். ஏனெனில், அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாக, உங்கள்மேல் கண்காணிப்பு செய்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களது பொறுப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது ஒரு துயரமாய் இருக்காது. அவர்கள் துயரத்தோடு பொறுப்பெடுத்தால், உங்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. 18 எங்களுக்காக மன்றாடுங்கள். எங்களுக்கு நல்ல மனசாட்சி உண்டு என்பதில், நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கிறோம். எல்லா வழியிலும் நன்மதிப்புக்குரியவர்களாக வாழவே ஆசைப்படுகிறோம். 19 நான் சீக்கிரமாய் உங்களிடம் வரும்படி, நீங்கள் மன்றாட வேண்டும் என உங்களிடம் விசேஷமாக வேண்டிக்கொள்கிறேன். 20 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், 21 இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 22 சகோதரர்களே, நான் உற்சாகப்படுத்தி எழுதியிருக்கும் இந்த வார்த்தைகளுக்குப் பொறுமையாய் செவிகொடுங்கள். நான் சுருக்கமான ஒரு கடிதத்தையே உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 23 நமது சகோதரன் தீமோத்தேயு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறான் என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் சீக்கிரம் வந்தால், நான் உங்களைப் பார்ப்பதற்கு அவனுடனேயே வருவேன். 24 உங்கள் தலைவர்கள் அனைவருக்கும், இறைவனின் மக்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். இத்தாலியில் உள்ளவர்களும் உங்களுக்குத் தங்கள் வாழ்த்துதலைக் கூறுகிறார்கள். 25 கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக! ஆமென்.

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate