Menu

உன்னதப்பாட்டு 3

IRV

1 இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. 2 நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. 3 நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். 4 நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; நான் அவரை என் தாயின் வீட்டிலும், என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். 5 எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன். சாலோமொனின் வருகை மணவாளி 6 வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்? 7 இதோ, சாலொமோனுடைய படுக்கை; இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள். 8 இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்; இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது. 9 சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார். 10 அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தளத்தைப் பொன்னினாலும், அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. 11 சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்கு அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate