Menu

சங்கீதங்கள் 81

IRV

1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள். 2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, பாட்டு பாடுங்கள். 3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள். 4 இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது. 5 நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது, இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார். 6 அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது. 7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா) 8 என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும். 9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம். 10 உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன். 11 என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. 12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள். 13 ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்! 14 நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன். 15 அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். 16 செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate