Menu

ஏசாயா 18

IRV

1 எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் இறக்கைகளுடையதும், 2 கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ, வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள். 3 பூமியில் குடியிருக்கிறவர்களும், தேசத்து மக்களுமாகிய நீங்களெல்லோரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். 4 நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார். 5 திராட்சைச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றி காய்க்கிற காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே காய்ப்புக்களை அறுத்துக் கொடிகளை வெட்டி அகற்றிப்போடுவார். 6 அவைகள் ஏகமாக மலைகளின் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பறவைகள் அதின்மேல் கோடைக்காலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மழைக்காலத்திலும் தங்கும். 7 அக்காலத்திலே அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான தேசமானது, சேனைகளின் யெகோவாவின் நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில் சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate